'Welcome' | 'நல்லறிவு மலரட்டும்'

Saturday, October 14, 2006

 
இஸ்லாமியப் பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கிய காலத்திலிருந்து குர்ஆனும், ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்று மக்களிடம் வைக்கும் போது நபிமொழிகளில் பலவீனமும் உண்டா? இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர். பலர் நம்மை கேலியும் கிண்டலும் செய்தனர். எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி? என்று தெரிந்து கொள்ள இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.

1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.

2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.

3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.

4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.

5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.

6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.

7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.

8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.

9. மொழி, இனம், பாரம்பரியம் மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.

10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.

11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.

12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.

13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.

இப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 7:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்

குறிப்பு: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸூன், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.

Labels:


Tuesday, September 05, 2006

 
மூன்றாம் கொள்கை 'ஸலஃபு'


குர்ஆன் சுன்னாவைக் கடந்து மூன்றாவதுக் கொள்கையாக, அல்லது குர்ஆன் சுன்னாவிலிருந்து பெறப்பட்ட ஒரு கொள்கையாக இந்தக் கொள்கை விளக்கப்படுகின்றது.

ஸலஃபுக் கொள்கையை சரிகாணக்கூடிய அறிஞர்கள், இந்தக் கொள்கையின் அவசியத்தை இப்படி விளக்குகிறார்கள்.

''குர்ஆன் சுன்னாவை விளங்குவதில் ஆரம்பக்காலத்தில் வாழ்ந்தவர்களுக்கே முதலிடம். ஏனெனில் மூன்றுத் தலைமுறைகளைப் பற்றி நபி(ஸல்) குறிப்பிட்டு அவர்களை சிறந்தவர்கள் என்று வரிசைப்படுத்தியுள்ளார்கள். அதில் முதலிடம் பிடிப்பது நபித்தோழர்கள். எனவே மார்க்கத்தை விளங்க அவர்களின் விளக்கம் அவசியமாகும். அவர்களிடமிருந்து கிடைக்காத விளக்கங்கள் பிறகு வந்த விளக்கங்கள் வழிகேட்டை ஏற்படுத்தி விடும். அப்படிப்பட்ட வழிகெட்ட கூட்டங்கள் பல உருவாயின. எனவே குர்ஆன் சுன்னாவிற்கு நாமாக விளக்கங்கள் கொடுக்காமல் முந்தி சென்ற ஸலஃபுகளின் (ஸஹாபாக்களின்) விளக்கத்தையே ஏற்க வேண்டும்''.

''குர்ஆன் சுன்னாவிற்கு சொந்த விளக்கம் கொடுக்கும் போது அது புதிது புதிதாக புதியக் கொள்கையையும் கூட்டத்தையும் உருவாக்கி விடுகின்றது. எனவே முந்தி சென்றவர்களின் வழிகாட்டலே மிக சரியானதாகும்'' என்பது அந்த அறிஞர்கள் விளக்கமாகும்.

பொதுவாக பார்க்கும் போது அறிஞர்களின் இந்த விளக்கம் சரியானதுதான் என்றாலும் சற்று ஆழமாக அணுகும் போது இதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளங்கலாம். இஸ்லாம் என்பது கொள்கை, அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுக்கான சட்டதிட்டங்கள் என்ற இரு அடிப்படைகளை கொண்டுள்ளது. கொள்கையும் அதன் விரிவாக்கமும், சட்டங்களும் அதன் விரிவாக்கமும் பரந்த நிலையைக் கொண்டதாகும்.

(இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்களுக்கான சட்டங்களைப் பற்றி நாம் இங்கு பேசவில்லை).

கொள்கையைப் பொருத்தவரை அதன் அடிப்படையான நம்பிக்கைகளில் எத்தகைய கருத்து வேறுபாடும் ஸஹாபாக்கள் காலத்தில் ஏற்படவில்லை. அதன் மீதே முஸ்லிம் உம்மத் நிலைத்து நிற்கவேண்டும். அடிப்படை நம்பிக்கையான கொள்கைகளில் இடற்பாடு ஏற்படும் போது அது மறுமை வாழ்க்கையை பாதித்து விடும்.

சட்டங்களை புரிந்துக் கொள்ளக் கூடியவற்றில் நபித்தோழர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே கிடையாது என்று எவராலும் கூறமுடியாது. சட்டங்களின் விரிவாக்கத்தை புரிந்துக் கொள்ளும் போக்கில் பல மாறுபட்ட கருத்தோட்டங்கள் நபித்தோழர்களுக்கு மத்தியில் இருந்துள்ளன. அடுத்தக் காலகட்டமான தாபியீன்கள் கூட குர்ஆன் சுன்னாவில் இடம் பெறும் பல வார்த்தைகளுக்கு பொருள் கொடுப்பதில் மாறுபட்ட விரிவான பார்வையை கொண்டிருந்தார்கள் என்பதை குர்ஆன் சுன்னாவுடனும் அதை விளக்கும் பெருங்கிரதங்களுடனும் நேரடித் தொடர்புக் கொண்டுள்ள எவராலும் காண முடியும்.

சட்டங்களை புரிந்துக் கொள்ளக் கூடிய போக்கில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இந்த உம்மத்தை வழிகேட்டில் கொண்டு போய் விட்டு விடும் என்று எந்தக் காலகட்டத்திலும் எந்த அறிஞரும் ஒரு கருத்தை முன் வைக்கவில்லை. சட்ட நுணுக்கங்களை புரிந்துக் கொள்வதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பாரதூரமான காரியம் என்று எவராவது கருதினால், அத்தகைய போக்கு சமூகத்தை திசை திருப்பும் என்று எவராவது வாதிட்டால் அந்த வாதத்தை இந்த காலகட்டத்தில் மட்டும் பொருத்திப் பார்ப்பதில் எந்த நியாயமுமில்லை.

இதுபற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்னால் குர்ஆன் சுன்னாவிலிருந்து எதையும் நேரடியாக சிந்தித்து விளங்கக் கூடாது. நபித்தோழர்களின் வழியையே பின்பற்ற வேண்டும் அதுதான் நேரான வழி என்று வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்கு என்னென்ன ஆதாரங்களை எடுத்து வைக்கிறார்கள்? அவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களும், அவர்களின் வாதங்களும் ஒத்துப் போகின்றதா.. என்பதை வரிசையாகப் பார்த்து விட்டு தொடர்வோம்.

குர்ஆன் சுன்னாவிலிருந்து எதையும் இன்றைக்கு நாம் நேரடியாக சிந்தித்து விளங்கக் கூடாது என்ற வாதத்திற்கு குர்ஆனிலோ சுன்னாவிலோ எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதை முதலில் கூறிக் கொள்கிறோம்.

நபித்தோழர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஸலஃபுகள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களை வரிசையாகப் பார்த்துவிட்டு தொடர்வோம்.

(குறிப்பு: ஸலஃபுகளுக்காக தொடங்கி நடத்தப்பட்டு வரும் 'இஸ்லாம்கல்வி' என்ற இணையத்தளத்தில் டாக்டர் நுபார், ஜமால் மதனி உட்பட இன்னும் பல மார்க்க அறிஞர்களின் வீடியோ தொகுப்புகள் கிடைக்கின்றன இவர்களில் பலர் ஸலஃபுக் கொள்கையை சரிகாணக் கூடியவர்கள். ஆனாலும் ஸலஃபுக் கொள்கை என்றால் என்ன என்பது பற்றி மேலோட்டமான விளக்கங்களே அங்கு கிடைக்கின்றன. விரும்பியவர்கள் அந்த ஸலஃபுகளின் இணையத்தளம் சென்று பார்த்துக் கொள்ளலாம்)

ஆதாரம் 1:
முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக முந்திக்கொண்டவர்களும், அவர்களை நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்களைப் அல்லாஹ் பொருந்திக் கொண்டான் அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். 9:100

இந்த வசனத்தில் குறிப்பிடப்படுவது அதிலும் மிக சிறப்பாக (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்) குறிப்பிடப்படுவது நபித்தோழர்களைத்தான். அவர்களைப் பின் தொடருபவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வதாக சொல்கிறான். அவர்களுக்கு பின்னால் வந்தவர்களுக்கு இத்தகைய பாக்கியம் கிடைக்குமா என்பது தெரியாத ஒன்றாகும். எனவே இறைவன் குறிப்பிடுவது போன்று அவர்களைப் பின்பற்றுவதுதான் சிறந்ததாகும். (*ஸலஃபுகள்)

விளக்கம்:
நபித்தோழர்கள் இறைவனின் அருளுக்குரியவர்கள் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. (அவர்களைப் பற்றிய முழுமையான ஞானம் இறைவனுக்கு மட்டுமே தெரியும்) அதற்காக அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற வாதத்தில் மட்டும் உடன்பாடில்லை. காரணம், மேற்கண்ட இந்த வசனத்தில் இறைவன் பொதுவாகப் "பின்பற்றுங்கள்" என்று சொல்லாமல் 'இஹ்ஸான்'களில் பின்பற்றுபவர்கள் என்றுதான் குறிப்பிடுகிறான்.

இஹ்ஸான் என்றால் என்ன?
இதற்கு அந்தக் கொள்கையுயுடைடயவர்கள் இப்படியும் அப்படியுமாக விளக்கம் கொடுக்கிறார்கள். எந்த விளக்கம் கொடுத்தாலும் சரிதான் ஒன்றுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏந்த நிபந்தனையுமில்லாமல் பின்பற்றத் தகுதியுள்ளவர்கள் இறைத்தூதர்கள் மட்டும் தான். பிற எவரைப் பின்பற்றுவதாக இருந்தாலும் இறைவன் அதற்கு நிபந்தனை விதிக்காமலில்லை. 'இஹ்ஸான் என்பதற்கு என்ன விரிவான பொருள் கொடுத்தாலும் சரி அது ஒரு நிபந்தனையா இல்லையா என்பதை அவர்கள் விளக்க வேண்டும். பொதுவாக பின்பற்றலலாம் என்றால் இஹ்ஸான் என்ற நிபந்தனையை இறைவன் ஏன் விதிக்க வேண்டும் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதிலிருக்காது.

நபித்தோழர்களை மட்டுமல்ல, இறை நம்பிக்கைக் கொண்ட யாரைப் பின்பற்றுவதாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் இந்த 'இஹ்ஸான்' என்ற நிபந்தனை பொருந்தி விடும். ஆனாலும் இறைவன் நபித்தோழர்களுடன் இதை பொருத்துவதற்கு நியாயமான காரணம் உள்ளது. பிற கோடான கோடி இறை நம்பிக்கையாளர்களை விட இவர்கள் ஈமானால் முந்தியவர்கள், நபியிடம் பாடம் கற்றவர்கள், கொள்கையில் இறுதி மூச்சுவரை உறுதியுடன் நின்றவர்கள். இப்படி சிறப்புக்குரியவர்களாக அவர்கள் இருப்பதால் அவர்கள் முன்னுதாரணமாக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் நபியுடைய அந்தஸ்த்தில் வைத்து பின்பபற்ற வேண்டாம் அங்கிருக்கும் இஹ்ஸான்களை மட்டும் எடுத்துக் கொண்டு பின்பற்றுங்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

இஹ்ஸானில் பின்பற்றுங்கள் என்று இறைவன் வழிகாட்டி இருக்கும் போது பொதுப்படையாக பிறரைப் பின்பற்றுவதற்கு இந்த வசனத்தை இவர்கள் எப்படி ஆதாரமாக்குகிறார்கள் என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

வசனம் சொல்வதென்ன!
ஒரு வசனத்தின் பொருள் என்னவென்பதை விளங்குவதற்கு அந்த வசனத்தின் வார்த்தை அமைப்புகளை ஊன்றி கவனிப்பது முக்கியமாகும். இந்த வசனத்தின் வார்த்தை அமைப்பை கவனித்துப் பொருள் எடுத்தால் இஹ்ஸானில் பின்பற்றுவது என்றால் என்னவென்பது கூட விளங்கி விடும்.

முஹாஜிர்களிலும் (மக்காவிலிருந்து நாடு துறந்தவர்களிலும்) அன்சாரிகளிலும் (மதீனாவாசிகளிலும்) யார் முந்திக் கொண்டார்களோ அவர்களை யார் இஹ்ஸானில் பின்பற்றுகிறார்களோ அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். இதுதான் வசன அமைப்பு.

மக்காவாசிகளும் சரி, மதினாவாசிகளும் சரி இவர்கள சம அந்தஸ்த்துடையவர்களாக இருக்கவில்லை. மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்தை ஏற்றவர்களை விட நபி(ஸல்) அவர்களின் ஆரம்பக்கால பிரச்சாரத்தால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்று அதனால் பெரும்துன்பத்திற்கு ஆளானவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் அந்தஸ்த்தால் உயர்ந்தவர்கள். அவர்களுக்குத்தான் முஹாஜிர்கள் என்ற அந்தஸ்த்து கிடைத்தது. அதே போன்று தான் மதினாவாசிகளும். குறிப்பாக சொல்வதாக இருந்தால் அகபா உடன்படிக்கை முதல் பத்ருபோர் வரை உள்ளக் காலகட்டத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்கள், அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் மகத்தான அந்தஸ்த்தை பெற்றார்கள். தன்னலம் பாராமல் இறைவனுக்காக இவர்கள் மேற் கொண்ட இந்த வாழ்க்கை முறையை இறைவன் இந்தவசனத்தில் உதாரணமாக்குகிறான். அவர்களின் நம்பிக்கையும் தியாகமும் இந்த வசனத்தில் இஹ்ஸான் என்று சுட்டிக் காட்டப்படுள்ளது. இதற்கு மாற்றமாக இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கும் இதையே அளவுகோளாக கொண்டால் இன்றைக்கும் பைத்துதுல் முகத்தஸை நோக்கித் தொழலாமா...? ஏனெனில் முன் சென்றவர்களில் பலர் பைத்துல் முகத்தஸை பார்த்து தொழுதுள்ளார்கள். இதுபோன்று பல சம்பவங்களை (சட்டங்களை) குறிப்பிடலாம். பொதுவாக இந்த வசனத்தை நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்பவர்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

தொடர்வேன் இறைவன் நாடட்டும்

Tuesday, August 29, 2006

 
ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் கொள்கைப் பற்றி.

தமிழ் முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த உலக வாழ்வில் சில பல சோதனைகளையும் துன்பங்களையும் சந்தித்தாலும் ஒரு முஸ்லிமுடைய முக்கியக் குறிக்கோள் மறுமையில் வெற்றியாளனாக இறைவன் தம்மை ஆக்க வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்.

இந்த உலக வாழ்வு ஒரு சோதனைக் கூடம் என்றும், மறுமையே நிரந்தர வாழ்வுக்குரிய இடம் என்றும் இறைவன் தனது குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். மறுமையில் வெற்றிப் பெறுவதாக இருந்தால் ஒருவன் தன் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலையும் இறைவன் மிக அழுத்தமாக தனது குர்ஆனில் சொல்லியுள்ளான்.

இறைத்தூதர்கள் வந்தார்கள், இறை வேத அடிப்படையில் வாழ்ந்துக் காட்டினார்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு தங்கள் வாழ்க்கையையே சிறந்த மாடலாக்கி விட்டு இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஒவ்வொரு இறைத்தூதரின் மறைவுக்கு பிறகும் அவர்களின் வாழ்க்கை வழிகாட்டல் எங்களுக்குப் போதாதென்று மக்கள் பின்னர் வந்தவர்களின் உபதேசங்களையும், வழிகாட்டலையும் மார்க்கம் என்றெண்ணி அதை பின் தொடர்ந்தார்கள். இது வழிகாட்டலை தவித்து வழிகேட்டை உருவாக்கியது. இறைவன் இந்த வழிகேட்டை சீர்படுத்த மீண்டும் அடுத்த தூதரை அனுப்பினான். நபிமார்களின் வருகைக்கு இது ஒரு காரணமாக இருந்தது.

முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகைக்கு பிறகு இனி அத்தகைய நிலை உருவாகக் கூடாது என்பதால் குர்ஆன் சுன்னாவை தவிர்த்த அனைத்து வழிகளையும் இஸ்லாம் அடைத்து விட்டது. குர்ஆன் சுன்னாவிலிருந்து கிடைக்கும் விளக்கமே அனைத்திற்கும் தீர்வு என்பது நிலை நிருத்தப்பட்டது.
நபி(ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு, அபூபக்கர் சித்தீக், உமர்(ரலி) ஆகியவர்களின் மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் நெறுக்கடி அதனால் விளைந்த காலகட்ட குழப்பங்களால் அன்றைக்கு வாழ்ந்த மக்களின் மனநிலை திசைதிருப்பப்பட்ட தருணங்களில் அந்த மக்களை மீண்டும் சரியான வழிக்கு அழைக்க முன்னுக்கு வந்து தியாகம் செய்த அறிஞர்களை வரலாறு மிக அழுத்தமாக பதிவு செய்துக் கொண்டது.
இன்றைக்கும் நான்கு இமாம்கள் என்று முஸ்லிம் சமுதாயத்தால் மிகவும் மதிக்கப்படக் கூடிய அந்த அறிஞர்கள் சம காலத்தில் (சற்று வித்தியாசங்களில்) வாழ்ந்து தங்களால் இயன்ற அளவு மார்க்க விளக்கங்களை தொகுத்து மக்களை முறைப்படுத்த முயன்றார்கள். பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வளிக்க குர்ஆன் சுன்னாவை அணுகியவர்கள் தங்கள் ஆய்விற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து பதில் அவர்களுக்கு எட்டாத போது சூழ்நிலையை அணுசரித்து தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள். சுய கருத்துக்கு பெருமளவு ஆட்கொள்ளப்பட்டது அறிஞர் அபூஹனிபா அவர்களின் தீர்ப்புகளாகும். அவர்களின் ஆய்வுக்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து தீர்வு கிடைக்காத போதே சொந்தக் கருத்தை முன் வைத்தார்களே தவிர ஆதாரம் கிடைத்தப்பிறகும் மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சுய கருத்துக்களை முன் வைக்கவில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
காலகட்டங்கள் நகர்ந்தது. இமாம்கள் என்று மக்களால் போற்றப்பட்டவர்கள் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் பக்தியாக உருவெடுத்தது. ஆனாலும் இறைவன் புதிய அறிஞர்களை உருவாக்கினான். சுய கருத்துக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்றும், குர்ஆன் சுன்னாவில் அனைத்திற்கும் தீர்வு உள்ளது என்றும் அவர்கள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்கள். வாய் வழியாகமட்டும் மக்களிடம் இருந்த சுன்னாக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தொகுக்கப்பட்டன. பொய்கள், சந்தேகங்கள் கலந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு வரையறைகள் முன் வைக்கபட்டு செய்திகள் வடிகட்டப்பட்டன. ஹதீஸ்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் கிடைத்தாலும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாங்கள் வடிகட்டியதில் இவைதான் எங்களுக்கு சரியாகத் தெரிகிறது என்று அவர்கள் குறிப்பிடத்தவறவில்லை.

(ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறு பற்றி நாம் இங்கு எழுதவில்லை. அது தலைப்போடு சம்பந்தப்படவில்லை என்பதால்)

ஹிஜ்ரி 700ல் வாழ்ந்த அறிஞர்களில் மிக பிரபல்யமாக இருந்தவர்கள் இப்னு கஸீர் அவர்களும், இப்னு தைமிய்யா அவர்களுமாவார்கள். இவர்கள் குர்ஆன் ஹதீஸ் ஆய்வில், பிரச்சாரத்தில் மிகத்தீவிரமாக கவனம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அன்றைக்கு அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் பெரும்பாலோர் ஹனபி மத்ஹபின் மீது பக்திக்கொண்டவர்களாக இருந்தார்கள். குர்ஆன் சுன்னாவின் ஆய்வும் கருத்துக்களும் ஆட்சியாளர்களுக்கு புதுமையாக தெரிந்ததால் அந்த ஆய்வை நடத்துபவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்கள். நெருக்கடிக்குள்ளானவர்களில் குறிப்பிடத்தக்கவர் அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள்.

மத்ஹப் மீதான தக்லீத் போக்கை கண்ட இப்னு தைமிய்யா அவர்கள்தான் முதன் முதலில் ஸலஃபு என்ற கருத்தை வெளியிடுகிறார்கள். யாரையாவது பின்பற்றத்தான் வேண்டுமானால் 'கலஃபு' (பிந்திவந்தவர்) களை விட 'ஸலஃபு' (முந்திச் சென்றவர்) களை பின்பற்றி விட்டுப் போகலாம் என்றார்கள்.

சிறந்தவர்கள் யார்? பிந்தி வந்த இமாம்களா.. அவர்களுக்கு முந்தி சென்றவர்களா... என்ற நிலை வரும் போது பிந்தி வந்தவர்களை விடாபிடியாக பிடித்துக் கொண்டிருப்பதை விட அவர்களுக்கு முந்தி சென்றவர்கள் காலத்தால் சிறந்தவர்கள் என்பதை இப்னு தைமிய்யா அவர்கள் உணர்த்தினார்கள்.

இந்த வாதம் தான் அதற்கு பிந்தையக் காலத்தில் ஸலஃபுக் கொள்கையாக உருவெடுத்தது. ஹிஜ்ரி 700க்கு முன் இந்தக் கொள்கைப் பற்றிய சிந்தனை முஸ்லிம் உம்மாவில் இல்லை.

அறிஞர் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்தில் எங்களுக்கும் உடன்பாடுதான். ஏனெனில் முந்தியவர்களா.. பிந்தியவர்களா.. என்றால் சிறந்தவர்களில் முந்தையவர்களுக்கே முதலிடம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் இன்றைக்கு சில அறிஞர்கள் குறிப்பிடுவது போன்று ஸலஃபுக் கொள்கை மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமா...?

இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

Monday, August 28, 2006

 
சத்தியமும் அசத்தியமும் ஒருபோதும் ஒன்றாகாது. குர்ஆனும் சுன்னாவும், குர்ஆன் சுன்னா இல்லாத மூன்றாம் ஒரு வழியை மார்க்கமாக்கியுள்ளதா... என்பதை அறியும் அவசியத்தோடு உங்களை சந்திக்க வருகிறோம் இன்ஷா அல்லாஹ்.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]