'Welcome' | 'நல்லறிவு மலரட்டும்'

Tuesday, August 29, 2006

 
ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் கொள்கைப் பற்றி.

தமிழ் முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த உலக வாழ்வில் சில பல சோதனைகளையும் துன்பங்களையும் சந்தித்தாலும் ஒரு முஸ்லிமுடைய முக்கியக் குறிக்கோள் மறுமையில் வெற்றியாளனாக இறைவன் தம்மை ஆக்க வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்.

இந்த உலக வாழ்வு ஒரு சோதனைக் கூடம் என்றும், மறுமையே நிரந்தர வாழ்வுக்குரிய இடம் என்றும் இறைவன் தனது குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். மறுமையில் வெற்றிப் பெறுவதாக இருந்தால் ஒருவன் தன் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலையும் இறைவன் மிக அழுத்தமாக தனது குர்ஆனில் சொல்லியுள்ளான்.

இறைத்தூதர்கள் வந்தார்கள், இறை வேத அடிப்படையில் வாழ்ந்துக் காட்டினார்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு தங்கள் வாழ்க்கையையே சிறந்த மாடலாக்கி விட்டு இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஒவ்வொரு இறைத்தூதரின் மறைவுக்கு பிறகும் அவர்களின் வாழ்க்கை வழிகாட்டல் எங்களுக்குப் போதாதென்று மக்கள் பின்னர் வந்தவர்களின் உபதேசங்களையும், வழிகாட்டலையும் மார்க்கம் என்றெண்ணி அதை பின் தொடர்ந்தார்கள். இது வழிகாட்டலை தவித்து வழிகேட்டை உருவாக்கியது. இறைவன் இந்த வழிகேட்டை சீர்படுத்த மீண்டும் அடுத்த தூதரை அனுப்பினான். நபிமார்களின் வருகைக்கு இது ஒரு காரணமாக இருந்தது.

முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகைக்கு பிறகு இனி அத்தகைய நிலை உருவாகக் கூடாது என்பதால் குர்ஆன் சுன்னாவை தவிர்த்த அனைத்து வழிகளையும் இஸ்லாம் அடைத்து விட்டது. குர்ஆன் சுன்னாவிலிருந்து கிடைக்கும் விளக்கமே அனைத்திற்கும் தீர்வு என்பது நிலை நிருத்தப்பட்டது.
நபி(ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு, அபூபக்கர் சித்தீக், உமர்(ரலி) ஆகியவர்களின் மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் நெறுக்கடி அதனால் விளைந்த காலகட்ட குழப்பங்களால் அன்றைக்கு வாழ்ந்த மக்களின் மனநிலை திசைதிருப்பப்பட்ட தருணங்களில் அந்த மக்களை மீண்டும் சரியான வழிக்கு அழைக்க முன்னுக்கு வந்து தியாகம் செய்த அறிஞர்களை வரலாறு மிக அழுத்தமாக பதிவு செய்துக் கொண்டது.
இன்றைக்கும் நான்கு இமாம்கள் என்று முஸ்லிம் சமுதாயத்தால் மிகவும் மதிக்கப்படக் கூடிய அந்த அறிஞர்கள் சம காலத்தில் (சற்று வித்தியாசங்களில்) வாழ்ந்து தங்களால் இயன்ற அளவு மார்க்க விளக்கங்களை தொகுத்து மக்களை முறைப்படுத்த முயன்றார்கள். பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வளிக்க குர்ஆன் சுன்னாவை அணுகியவர்கள் தங்கள் ஆய்விற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து பதில் அவர்களுக்கு எட்டாத போது சூழ்நிலையை அணுசரித்து தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள். சுய கருத்துக்கு பெருமளவு ஆட்கொள்ளப்பட்டது அறிஞர் அபூஹனிபா அவர்களின் தீர்ப்புகளாகும். அவர்களின் ஆய்வுக்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து தீர்வு கிடைக்காத போதே சொந்தக் கருத்தை முன் வைத்தார்களே தவிர ஆதாரம் கிடைத்தப்பிறகும் மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சுய கருத்துக்களை முன் வைக்கவில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
காலகட்டங்கள் நகர்ந்தது. இமாம்கள் என்று மக்களால் போற்றப்பட்டவர்கள் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் பக்தியாக உருவெடுத்தது. ஆனாலும் இறைவன் புதிய அறிஞர்களை உருவாக்கினான். சுய கருத்துக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்றும், குர்ஆன் சுன்னாவில் அனைத்திற்கும் தீர்வு உள்ளது என்றும் அவர்கள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்கள். வாய் வழியாகமட்டும் மக்களிடம் இருந்த சுன்னாக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தொகுக்கப்பட்டன. பொய்கள், சந்தேகங்கள் கலந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு வரையறைகள் முன் வைக்கபட்டு செய்திகள் வடிகட்டப்பட்டன. ஹதீஸ்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் கிடைத்தாலும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாங்கள் வடிகட்டியதில் இவைதான் எங்களுக்கு சரியாகத் தெரிகிறது என்று அவர்கள் குறிப்பிடத்தவறவில்லை.

(ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறு பற்றி நாம் இங்கு எழுதவில்லை. அது தலைப்போடு சம்பந்தப்படவில்லை என்பதால்)

ஹிஜ்ரி 700ல் வாழ்ந்த அறிஞர்களில் மிக பிரபல்யமாக இருந்தவர்கள் இப்னு கஸீர் அவர்களும், இப்னு தைமிய்யா அவர்களுமாவார்கள். இவர்கள் குர்ஆன் ஹதீஸ் ஆய்வில், பிரச்சாரத்தில் மிகத்தீவிரமாக கவனம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அன்றைக்கு அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் பெரும்பாலோர் ஹனபி மத்ஹபின் மீது பக்திக்கொண்டவர்களாக இருந்தார்கள். குர்ஆன் சுன்னாவின் ஆய்வும் கருத்துக்களும் ஆட்சியாளர்களுக்கு புதுமையாக தெரிந்ததால் அந்த ஆய்வை நடத்துபவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்கள். நெருக்கடிக்குள்ளானவர்களில் குறிப்பிடத்தக்கவர் அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள்.

மத்ஹப் மீதான தக்லீத் போக்கை கண்ட இப்னு தைமிய்யா அவர்கள்தான் முதன் முதலில் ஸலஃபு என்ற கருத்தை வெளியிடுகிறார்கள். யாரையாவது பின்பற்றத்தான் வேண்டுமானால் 'கலஃபு' (பிந்திவந்தவர்) களை விட 'ஸலஃபு' (முந்திச் சென்றவர்) களை பின்பற்றி விட்டுப் போகலாம் என்றார்கள்.

சிறந்தவர்கள் யார்? பிந்தி வந்த இமாம்களா.. அவர்களுக்கு முந்தி சென்றவர்களா... என்ற நிலை வரும் போது பிந்தி வந்தவர்களை விடாபிடியாக பிடித்துக் கொண்டிருப்பதை விட அவர்களுக்கு முந்தி சென்றவர்கள் காலத்தால் சிறந்தவர்கள் என்பதை இப்னு தைமிய்யா அவர்கள் உணர்த்தினார்கள்.

இந்த வாதம் தான் அதற்கு பிந்தையக் காலத்தில் ஸலஃபுக் கொள்கையாக உருவெடுத்தது. ஹிஜ்ரி 700க்கு முன் இந்தக் கொள்கைப் பற்றிய சிந்தனை முஸ்லிம் உம்மாவில் இல்லை.

அறிஞர் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்தில் எங்களுக்கும் உடன்பாடுதான். ஏனெனில் முந்தியவர்களா.. பிந்தியவர்களா.. என்றால் சிறந்தவர்களில் முந்தையவர்களுக்கே முதலிடம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் இன்றைக்கு சில அறிஞர்கள் குறிப்பிடுவது போன்று ஸலஃபுக் கொள்கை மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமா...?

இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]